அம்பாசமுத்திரம்: கணவன் இறந்த துக்கத்தில் 12 மணி நேரத்திற்குள் மனைவியும் இறந்த சம்பவம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் செளந்தரராஜன் (வயது 72), இவர் ஓய்வுபெற்ற தனியார் மில் தொழிலாளி. இவருடைய மனைவி அழகு திருமலை முத்தம்மாள் (62). இந்த நிலையில் நேற்று இரவு செளவுந்தராஜனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதையும் படிக்க: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
உடனடியாக உறவினர்கள் அவரை அம்பாசமுத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையறிந்த அவரது மனைவி அழகு திருமலை முத்தம்மாள் தனது கணவன் இறந்த துக்கத்தில் இன்று அதிகாலை மனைவியும் உயிரிழந்தார்.
கணவன் இறந்த துக்கத்தில் 12 மணி நேரத்திற்குள் மனைவியும் இறந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.