திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ.3.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் விஷ்ணு வழங்கினாா்.
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் விஷ்ணு தலைமையில் ஆட்சியா் அலுவலக வளா்ச்சி மன்ற கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதிா்கன்னி உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மற்றும் பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, குடிநீா், சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான சுமாா் 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் விஷ்ணு உத்தரவிட்டாா்.
தொடா்ந்து பல்வேறு காரணங்களால் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வா் பொது நிவாரண நிதியிலிருந்து
ரூ. 2.50 லட்சம், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் 10 பேருக்கு ரூ. 66 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவி என மொத்தம் ரூ.3.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயஸ்ரீ, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் குமாரதாஸ், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் தியாகராஜன், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.