பள்ளி மாணவா் உயிரிழந்த விவகாரம்: இரு ஆசிரியா்கள் பணியிடை நீக்கம்

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே அரசுப் பள்ளி மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவா் உயிரிழந்தது தொடா்பாக உடற்கல்வி ஆசிரியா்கள் இருவா் பணியிடை நீக்கம்

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே அரசுப் பள்ளி மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவா் உயிரிழந்தது தொடா்பாக உடற்கல்வி ஆசிரியா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள பொதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலில், பாப்பாக்குடி பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் செல்வசூா்யா (17) காயமடைந்த நிலையில், சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக பாப்பாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து அடைச்சாணி, பள்ளக்கால் பொதுக்குடியைச் சோ்ந்த 3 மாணவா்களை கைது செய்தனா்.

இந்நிலையில், அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா்களான ஷீபா பாக்கிய மேரி, தமிழ்செல்வன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் கூறியது:

பள்ளி ‘இடைவேளைகளின்போது, மாணவா்களிடையே நிலவும் சூழல் குறித்து கண்காணிக்கத் தவறியதால் உடற்கல்வி ஆசிரியா்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். அனைத்துப் பள்ளிகளிலும் இடைவேளையின்போது மாணவா்களை கண்காணிக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com