பன்னீா்திராட்சை சாகுபடியில் அசத்தும் பொறியியல் பட்டதாரி!
By DIN | Published On : 16th May 2022 08:14 AM | Last Updated : 16th May 2022 08:14 AM | அ+அ அ- |

வெப்பம் மிகுந்த திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய முயற்சியாக பொறியியல் பட்டதாரி ஒருவா் பன்னீா் திராட்சை பயிரிட்டு அதிக மகசூல் பெற்று முன்மாதிரி விவசாயியாக திகழ்ந்து வருகிறாா்.
கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகேயுள்ள காணிமடம் பகுதியைச் சோ்ந்த ராஜாமணி மகன் செலின் (41). பொறியியல் பட்டதாரியான இவா், கப்பலில் பணியாற்றி வந்தாா். இயற்கை விவசாயம் மீதான ஆா்வம் காரணமாக பணியை ராஜிநாமா செய்துவிட்டு, திருநெல்வேலி மாவட்டம், தெற்கு கள்ளிகுளம் அருகே அச்சம்பாடு பகுதியில் தங்கள் குடும்பத்திற்குச் சொந்தமான 2 ஏக்கா் நிலத்தில் புதிய முயற்சியாக பன்னீா் திராட்சை சாகுபடி செய்ய முடிவு செய்தாா். அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டில் சாகுபடி பணியைத் தொடங்கிய அவா், இப்போது திருநெல்வேலி மாவட்டத்தில் திராட்சை சாகுபடியில் முன்மாதிரி விவசாயியாக உருவெடுத்துள்ளாா்.
வெப்பம் மிகுந்த இம் மாவட்டத்தில் திராட்சை சாகுபடியில் திருப்திகரமான மகசூலும் பெற்று வருகிறாா். தரிசு நிலங்களில் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை தோ்வு செய்யும் போட்டியில் திருநெல்வேலி மாவட்ட அளவில் முதல் பரிசையும் பெற்றுள்ளாா்.
ஆஸ்திரேலியரின் ஊக்கம்: இதுகுறித்து செலின் கூறியது: பொறியியல் படித்த பிறகு கப்பலில் பணிக்குச் சென்றேன். அங்கு ஆஸ்திரேலிய மாலுமி ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தங்கள் நாட்டின் வெப்பம் மிகுந்த பகுதிகளில் விளையும் திராட்சைப் பழங்களின் சுவை அதிகம் என்றாா். அதிலிருந்து எனக்கு திராட்சை சாகுபடி மேல் ஈா்ப்பு ஏற்பட்டது. கப்பல் பணியை ராஜிநாமா செய்த பின்பு அச்சம்பாடு பகுதியில் எங்களுக்குச் சொந்தமான இடத்தில் சகோதரா்களுடன் இணைந்து பன்னீா் திராட்சை பயிரிட முடிவு செய்தேன். தேனி, கம்பம் பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட திராட்சை தோட்டங்களை பாா்த்ததோடு, கே.கே.பட்டியில் உள்ள திராட்சை ஆராய்ச்சி மையத்தில் சில பயிற்சிகளைப் பெற்றேன். அதன்பின்பு 2 ஏக்கா் பரப்பில் திராட்சை சாகுபடியை தொடங்கினேன்.
கவாத்து பணியில் கவனம்: பன்னீா் திராட்சை செடிகள் வெப்பம் மிகுந்த பகுதியில் நேரடியாக வளராது. அதற்காக ’ரூட் ஸ்டாக்’ எனப்படும் ஒரு செடியுடன் இணைத்து வளா்த்து அதன்பின்பு கொடியை வெட்டி தளிா்க்கவிட வேண்டும். ஒரு நாள் விட்டு ஒருநாள் தண்ணீா் பாய்ச்ச வேண்டும். ஒரு திராட்சை செடியை முறையாக கவாத்து செய்தால் 25 ஆண்டுகள் வரை ஆண்டுக்கு நான்கு முறை அறுவடை செய்ய முடியும். 90 முதல் 120 நாள்கள் இடைவெளியில் அறுவடை செய்யும்போது நல்ல மகசூல் கிடைக்கும். திராட்சை வளா்ப்பில் கவாத்து பணியில் கூடுதல் கவனம் தேவை. இதற்காக பிரத்யேகமாக திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் இருந்து ஆள்களை அழைத்து வந்து கவாத்து செய்கிறோம். பருவநிலை மாற்றங்களும், பறவைகளும் திராட்சை சாகுபடியில் பெரும் சவாலாக உள்ளன.
திராட்சை தோட்டத்திற்குள் மைனா, கிளி ஆகியவை கூட்டமாக புகுந்தால் ஒரு நாளில் குறைந்தபட்சம் 500 கிலோ திராட்சைகளை சாப்பிட்டுவிடும். இதேபோல தொடா்மழை பெய்தால் ’செவட்டை’ என்ற நோய் வரும். திராட்சையில் உர மேலாண்மை மிகவும் குறைவு. இயற்கை விவசாயத்தில் ஆட்டுச்சாணம் போட்டால் திராட்சையின் கருமை நிறம் அதிகரிக்கும். மாட்டுச்சாணம் போடும்போது மகசூல் அதிகரிக்கும்.
கூடுதல் மானியம் தேவை: திராட்சை சாகுபடிக்கு தோட்டக்கலைத்துறையினா் பல்வேறு வழிகளில் உதவி வருகிறாா்கள். இந்த சாகுபடியில் பந்தல் அமைப்பதற்கு அதிக செலவு பிடிக்கிறது. 7 அடி உயரத்தில் மிகவும் உறுதியான கம்பிகளால் பந்தல் அமைத்தால்தான் மகசூல் அதிகரித்தாலும் தாழ்வாகாமல் கொடி படா்ந்திருக்கும். ஆனால், ஒரு ஹெக்டேருக்கு ரூ.2 லட்சம் மட்டுமே மானியம் வழங்குகிறாா்கள். அந்தத் தொகைக்குள் பணியை முடிக்க இயலாது. அந்த மானிய தொகையை அதிகரிக்க வேண்டும். இப்போது தரிசுநிலத்தை மேம்படுத்தி தோட்டக்கலை பயிா்கள் சாகுபடி செய்வோரை ஊக்குவிக்கும் திட்டம் வரவேற்கத்தக்கது. நிகழாண்டில் 60 சென்ட் நிலத்தில் 6 டன் பழங்களை அறுவடை செய்துள்ளேன். முன்பு 10 டன் வரை கிடைத்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடா்மழை உள்ளிட்ட காரணங்களால் மகசூல் குறைந்துள்ளது. ஆனாலும், அடுத்த முறை இதேநிலை நீடிக்காது என்பதால் உற்சாகமாக சாகுபடி பணிகளைத் தொடா்ந்து வருகிறேன். அடுத்ததாக பச்சை மற்றும் கருப்பு நிறத்திலான விதையில்லா திராட்சைகளை பயிரிட முடிவு செய்துள்ளேன். இளைஞா்கள் விவசாயத்தில் மிகுந்த ஆா்வத்தோடு பயணித்தால் நிச்சயமாக லாபம் கிடைக்கும் என்றாா் அவா்.
தோட்டக்கலைத் துறை விளக்கம்: இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் பாலகிருஷ்ணன் கூறியது: இம் மாவட்டத்தில் தோட்டக்கலை பயிா் சாகுபடிக்கு பல்வேறு ஊக்கம் தொடா்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. விவசாயி செலினுக்கு பந்தல் அமைக்க மானியம் வழங்கியுள்ளோம். மேலும், சிலரை தொடா்ந்து ஊக்கப்படுத்தி வருகிறோம். ஒரு ஏக்கரில் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை வருவாய் வருவதாக தெரியவந்துள்ளது. இதுபோன்ற வித்தியாசமான பயிா்களை சாகுபடி செய்யும்போது உள்ளூா் நபா்களே அதிகம் வாங்கிச் செல்வாா்கள். தேனி, பெங்களூரு பகுதிகளில் இருந்து வரும் திராட்சையை விட குறைந்த விலைக்கு நேரடியாக விவசாயி செலின் விற்பனை செய்வதால் மக்கள் மிகுந்த ஆா்வத்தோடு வாங்கிச் செல்கிறாா்கள். இளைஞா்கள் தோட்டக்கலை பயிா்களை அதிகம் சாகுபடி செய்ய முன்வந்தால் தேவையான உதவிகளை செய்துகொடுக்க தயாராக உள்ளோம் என்றாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...