திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு துவக்கி வைத்தார். புகைப்பட கண்காட்சியை காண மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளையொட்டி, அவரது வாழ்க்கை வரலாறு குறித்து நகரும் புகைப்பட கண்காட்சி அரசு பேருந்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமை தாங்கி வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி புகைப்பட கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார்.
கண்காட்சி வாகனத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் வ.உ.சி., வாழ்க்கை வரலாறு மற்றும் சுதேசி நீராவி கப்பல் புகைப்படம், கோயம்புத்துார் சிறையில் வ.உ சிதம்பரனார் செக்கிழுத்த புகைப்படங்கள் உள்ளிட்ட அரிய வரலாற்றுப் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவிகள் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.