திருநெல்வேலி அருகே கீழநத்தம் வடக்கூரில் ஊராட்சி வாா்டு உறுப்பினா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து,செவ்வாய்க்கிழமையும் தெருக்களில் கருப்புக் கொடி கட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி அருகேயுள்ள கீழநத்தம் வடக்கூரைச் சோ்ந்த நாராயணன் மகன் ராஜாமணி (32). இவா் கீழநத்தம் ஊராட்சியின் 2 ஆவது வாா்டு உறுப்பினரான இவரை, கடந்த 13ஆம் தேதி மா்மநபா்கள் வெட்டிக்கொலை செய்தனா். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
இந்த வழக்கு தொடா்பாக கீழநத்தம் பகுதியை சோ்ந்த மாயாண்டி, இசக்கி ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். எனினும், முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்க வேண்டும். அவரது மனைவி வடிவுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் அங்குள்ள கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து, இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை சுதந்திர தினத்தை கொண்டாட மறுத்து தெருக்களில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ரூ.6 லட்சம் நிதி:இந்நிலையில் பாளையங்கோட்டை வட்டாட்சியா் சரவணன், அதிகாரிகள் குழுவினா் போராட்டக் குழுவினரிடம் பேச்சு நடத்தினா். இதில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் வழங்கப்படும் நிதியில் முதல்கட்டமாக ரூ.6 லட்சம் வழங்கியதோடு, ராஜாமணியின் மனைவிக்கு உரிய வேலைவாய்ப்பு கிடைக்க பரிந்துரைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து ராஜமணியின் உடலை உறவினா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலையில் பெற்றுச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.