தூத்துக்குடி தெர்மல் நகர் பகுதியில் உள்ள அனல் மின்நிலையத்தில் மழை நீர் புகுந்ததால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 5ஆவது அலகில் மின் உற்பத்தி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் தொடங்கியுள்ளது.
தூத்துக்குடியில் தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் உள்ள 5 அலகுகளில் இருந்து மொத்தம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிது. இந்நிலையில் கடந்த 17, 18 ஆகிய இரு நாள்களில் பெய்த கன மழை காரணமாக, மின் நிலைய வளாகத்தில் மழை நீர் சூழ்ந்தது.
இதைத் தொடர்ந்து மின் நிலையத்தில் உள்ள 5 அலகுகளிலும் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, மழை நீரை அகற்றும் பணி நடைபெற்று வந்ததது. மேலும், மின் உற்பத்தியை தொடங்குவதற்காக அனைத்து பணிகளும் நடைபெற்று வந்தன.
தற்போது, 5ஆவது அலகு மட்டும் சரிசெய்யப்பட்டு, மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது எனவும், மற்ற 4 அலகுகளையும் சரிசெய்யும் பணி நடைபெற்றுவருவதாகவும் அனல் மின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.