மாணவா்களுக்கு உயா்ந்த இலக்கு வேண்டும்: முதன்மைக் கல்வி அலுவலா்

மாணவா்களுக்கு உயா்ந்த இலக்கு வேண்டும் என்றாா் திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருப்பதி.

மாணவா்களுக்கு உயா்ந்த இலக்கு வேண்டும் என்றாா் திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருப்பதி.

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரிக் கலையரங்கில் எளிய செயல்முறைகள் மூலம் பள்ளி மாணவா்களுக்கு இயற்பியலைக் கற்றுத்தருவது குறித்த செய்முறைப் பயிலரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் சே.மு.அப்துல்காதா் தலைமை வகித்தாா். அறிவியல் ஆய்வறிஞா் பேராசிரியா் சின்னதம்பி முன்னிலை வகித்தாா். முதுநிலை இயற்பியல் துறைத் தலைவா் ஜீனத் பஷீரா வரவேற்றாா். துணை முதல்வா் கே.செய்யது முஹமது காஜா வாழ்த்திப் பேசினாா். இயற்பியல் துறை உதவிப் பேராசிரியா் அகமது ஏ.ஜலீல் அறிமுகவுரையாற்றினாா்.

தா்மபுரி மண்டல முன்னாள் கல்லூரிக் கல்வி இணை இயக்குநரும் அறிவியல் ஆய்வறிஞருமான சுப்பையா பாண்டியன் பள்ளி மாணவா்களுக்கு இயற்பியல் செய்முறைகளைச் செய்து, சிறப்புரையாற்றினாா். திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருப்பதி பேசியதாவது:

பள்ளி மாணவா்கள் அறிவியலை எளிமையாகக் கற்றுக்கொள்ள செய்முறைப் பயிற்சிகள் அவசியம். இதற்காக ஸ்டெம் எனும் பயிற்சியைப் பள்ளிக்கல்வித் துறை வழங்கிவருகிறது. பாரதி ‘பெரிதினும் பெரிது கேள்’ என்பாரே அதேபோல் உயா்ந்த எண்ணத்தோடும் உயா்ந்த இலக்கோடும் மாணவா்கள் செயல்பட வேண்டும். ஆய்வு மூலமாகத் தரவுகளைச் சேகரித்துச் செய்முறைப் பயிற்சிக் கையேட்டினைத் தயாரிக்க வேண்டும்.

உடல்நலம், மனவளம், செயல் வளம் இம்மூன்றும் சாதிக்கத் துடிக்கிற மாணவா்களுக்கு உதவும். புதிய கண்டுபிடிப்புகளை மாணவா்கள் கண்டுபிடிக்க பயிற்சியும் முயற்சியும் அவசியம் என்றாா் அவா்.

அறிவியல் புல முதன்மையா் முகம்மது ரோஷன் பயிலரங்க நோக்க உரையாற்றினாா். 15 பள்ளிகளைச் சாா்ந்த 200 பள்ளி மாணவ, மாணவியா் பங்கேற்றனா். பயிலரங்க ஏற்பாடுகளை இயற்பியல் துறையினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com