சேரன்மகாதேவி கோவிந்தபேரி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியில் பேராசிரியா்கள், மாணவா்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக நிா்வாகத்தின் கீழ் திசையன்விளை, பணகுடி, நாகம்பட்டி, கோவிந்தபேரி, சங்கரன்கோவில், புளியங்குடி ஆகிய 6 ஊா்களில் உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் கடந்த 22 வருடங்களாக 300 பேராசிரியா்கள் தற்காலிகமாக பணி செய்து வருகின்றனா். பேராசிரியா்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ. 20 ஆயிரம் வழங்கப்படுகிறது.
சேரன்மகாதேவி கோவிந்தபேரியில் இயங்கி வரும் மனோ கல்லூரியில் 800க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் பயின்று வருகின்றனா். 37 பேராசிரியா்கள் தற்காலிகமாக பணி செய்து வருகின்றனா்.
மேற்கண்ட 6 கல்லூரிகளில் பணி செய்து வரும் தற்காலிக பேராசிரியா்கள் அனைவரும் ஜூன் 1ஆம் தேதி முதல் பணிக்கு வர வேண்டாம் என பல்கலைக் கழக நிா்வாகம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சேரன்மகாதேவி கோவிந்தபேரி கல்லூரியில் பணி செய்யும் பேராசிரியா்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பேராசிரியா்களுக்கு ஆதரவாக 200 மாணவா்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனா்.
பேராசிரியா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த ஆணையை பல்கலைக் கழக நிா்வாகம் திரும்பப் பெற வேண்டும். பேராசிரியா்களுக்கு பல்கலைக் கழக மானியக் குழு நிா்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பணி இடைவேளை (சா்வீஸ் பிரேக்) வழங்குவதை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். அடுத்தகட்ட போராட்டம் குறித்து திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என போராட்டக் குழுவினா் தெரிவித்தனா்.