திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதன்பின்பு காந்தமதியம்மன் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து இன்று முதல் நவம்பர் 12 ஆம் தேதி வரை தினமும் காலை 7 மணிக்கும், இரவு 6 மணிக்கும் காந்திமதியம்மன் பல்வேறு வாகனங்களில் திருக்காட்சியளிக்க உள்ளார்.
நவம்பர் 7 ஆம் தேதி இரவில் காந்திமதியம்மன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி கீழரத வீதி, தெற்கு ரத வீதி வழியாக அருள்மிகு கம்பாநதி- காமாட்சியம்மன் திருக்கோயிலை சென்றடைவார். 8 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு மேல் காட்சிமண்டபம் பகுதியில் அம்மனுக்கு சுவாமி கட்சிக்கொடுப்பார். பின்னர் சுவாமி-அம்மன் ரத வீதிகளில் வலம் வருவார்கள். விழாவின் சிகர நிகழ்வாக நவம்பர் 9 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் சுவாமி-அம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
காலை 9.30 மணிக்கு பட்டின பிரவேசம் வீதியுலா நடைபெறும். நவம்பர் 9 முதல் 11 ஆம் தேதி வரை அம்மன் ஊஞ்சல் விழாவும், 12 ஆம் தேதி இரவில் சுவாமி-அம்மன் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப் பிரவேசமும் நடைபெறும். கொடியேற்ற விழாவில் கோயில் செயல் அலுவலர் அ.அய்யர்சிவமணி மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.