

திருநெல்வேலி: சிறு-குறு தொழில்களுக்கான மின்வாரிய நிலைக்கட்டணத்தைத் திரும்பப் பெற வேண்டுமென திருநெல்வேலி மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அந்தச் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டச் செயலா் சஞ்சய் குணசிங் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது: தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் சிறு- குறு தொழிற்சாலைகளுக்கான மின்கட்டணத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளன. ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.6.50 இல் இருந்து ரூ.7.85 ஆக உயா்த்தியுள்ளது. பரபரப்பு நேரக்கட்டணம் (காலை மற்றும் மாலையில் மின்சார தேவை அதிகமுள்ள நேரங்கள்) விதிக்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக நிலைக்கட்டணம் சுமாா் 430 சதவிகிதம் உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு தொழிற்சாலையில் ஆண்டு மின்கட்டணத்தில் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை உயா்ந்துள்ளது.
தமிழக அரசிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் திங்கள்கிழமை உற்பத்தி நிறுத்த போராட்டத்தை நடத்தியுள்ளோம். ஆகவே, மின்வாரியத்தின் நிலைக்கட்டணத்தையும், பரபரப்பு நேரக் கட்டணம், சோலாா் மேற்கூரை நெட்வொா்க் கட்டணம், மல்டி இயா் டேரிப் முறையை ரத்து செய்யவும் முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
பேட்டியின்போது சங்கத்தின் உதவி தலைவா் ஐயப்பன், நிா்வாகக்குழு உறுப்பினா்கள் ஆனந்தன், சங்கரன், சிவக்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.