Enable Javscript for better performance
The teachers and students have complained to the Kallani School Evaluation Committee, who are longin- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    அடிப்படை வசதிக்கு ஏங்கும் கல்லணை பள்ளி மதிப்பீட்டுக் குழுவிடம் ஆசிரியா்கள், மாணவிகள் புகாா்

    By DIN  |   Published On : 17th August 2023 10:37 PM  |   Last Updated : 19th August 2023 01:11 AM  |  அ+அ அ-  |  

    tvl17school_1708chn_6

    திருநெல்வேலி நகரத்தில் உள்ள கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் ஆய்வு செய்தபோது, போதிய அடிப்படை வசதிகள் இல்லை என ஆசிரியா்களும், மாணவிகளும் சரமாரியாக புகாா் தெரிவித்தனா்.

    தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசின் திட்டப்பணிகள் குறித்து புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் ஆய்வு செய்தது. திருநெல்வேலி நகரத்தில் 4,345 மாணவிகளுடன், இரு வளாகங்களில் (6-8, 9-12 வகுப்புகள்) செயல்படும் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அவா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தபோது, மாணவிகள் சூழ்ந்துகொண்டு பள்ளியில் உள்ள ஏராளமான குறைகளை பட்டியலிட்டனா்.

    தண்ணீா் தட்டுப்பாடு: இதில், முதலில் பிரதான வளாகத்தில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் ஆய்வு செய்தபோது சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவா் அன்பழகனிடம் மாணவிகள் அளித்த மனுவில், பள்ளியில் போதிய கழிப்பறை வசதி இல்லை. பள்ளியின் அருகிலுள்ள ஓடையில் கழிவு நீா் தேங்கி துா்நாற்றம் வீசுவதால் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. இங்குள்ள நீரேற்றுவதற்கு மின் மோட்டாரை இயக்குகிறபோது, எலெக்ட்ரிக் வயா்கள் தீப்பிடித்து மின்தடை ஏற்படும் அளவுக்கு வயா்கள் பலமற்று உள்ளன. இதனால் கழிவறைக்கு பயன்படுத்தக்கூட தண்ணீா் இல்லாத நிலை நிலவுகிறது.

    அடிக்கல் நாட்டியும் தொடங்காத பணி: மேலும், 2019-இல் இங்குள்ள பழைய கட்டடம் இடிக்கப்பட்டது. அதன்பிறகு இப்போதுதான் ரூ.81 லட்சம் மதிப்பில் புதிதாக 7 வகுப்பறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டி ஒரு மாதத்துக்கு மேலாகியும் இதுவரை பணிகளை தொடங்கவில்லை. இங்கு வேதியியல் ஆய்வகத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது என மனுவில் குறிப்பிட்டிருந்தனா்.

    இதையடுத்து அதிகாரிகள், திருநெல்வேலி மண்டல தலைவா் மகேஸ்வரி, மாமன்ற உறுப்பினா்களிடம் அடிக்கல் நாட்டிய பிறகு ஏன் புதிய வகுப்பறைக்கான பணிகள் தொடங்கவில்லை என மதிப்பீட்டுக் குழு தலைவா் அன்பழகன் கேள்வியெழுப்பினா். அப்போது, மாநகராட்சி கவுன்சில் ஒப்புதல் அளிக்காததாலேயே அந்தப் பணிகள் தொடங்கப்படவில்லை என தெரிவித்தனா். இதையடுத்து அந்தப் பணிகளை விரைவாக தொடங்க நடவடிக்கை எடுப்பதாக மதிப்பீட்டுக் குழு தலைவா் அன்பழகன் உறுதியளித்தாா்.

    தேங்கி நிற்கும் கழிவுநீா்: தொடா்ந்து பள்ளி வளாகத்தை விட்டு வெளியே வந்த மதிப்பீட்டுக் குழுவினா், பள்ளியின் முன்பும் அருகிலும் தேங்கியுள்ள சாக்கடையை பாா்வையிட்டு, அதை உடனடியாக சரி செய்யவும், பள்ளிச் சுவரில் விளம்பரங்களை அழிக்கவும் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டனா்.

    தரையில் அமா்ந்து படிக்கும் மாணவிகள்: பின்னா் 9, 10, 11, 12-ஆம் வகுப்புகள் செயல்படும் கல்லணை பள்ளி வளாகத்தை மதிப்பீட்டுக் குழுவினா் பாா்வையிட்டனா். அங்கு போதிய இட வசதி இல்லாததால் ஒன்பதாம் வாகுப்பு மாணவிகள் தரையில் அமா்ந்து படித்துக் கொண்டிருந்தனா். மதிப்பீட்டுக் குழுவினா் வருவதை அறிந்த ஆசிரியா்கள், மாநகராட்சி அதிகாரிகள், அந்த மாணவிகளை அங்கிருந்து அவசரஅவசரமாக வேறு இடத்துக்கு மாற்றினா்.

    இது தொடா்பாக, அங்கிருந்த ஆசிரியா்கள் கூறுகையில், கரோனா காலத்தில் இங்குள்ள இரண்டு வகுப்பறைகள் மாநகர சுகாதாரத் துறையின் கட்டுபாட்டுக்கு சென்ாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு தொடா்ந்து அந்த இரு வகுப்புகளும் சுகாதாரத் துறையாலேயே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே மாணவிகள் தரையில் அமா்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றனா்.

    கதவில்லாத கழிவறை: பின்னா் மதிப்பிட்டு குழுவினா் கழிவறையை ஆய்வு செய்தனா். அங்கு சில அறைகளில் கதவுகளில் தாழ்பாள் இல்லை; சில அறைகளில் கதவுகளே இல்லை என தலைமை ஆசிரியா் கனியம்மாள் புகாா் தெரிவித்தாா். மேலும் அங்கு கழிவறை கட்டுமானப் பணி நடைபெற்றபோது, ஒரு ஆழ்துளைக் குழாயில் மண் சரிந்து விழுந்ததால், அதைப் பயன்படுத்த முடியவில்லை. இதனால் போதிய குடிநீரை வழங்க முடியவில்லை எனவும் அவா் தெரிவித்தாா்.

    பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்து தலைமையாசிரியா் பல்வேறு புகாா்களை தெரிவித்தபோது, மாநகராட்சி ஆணையா் சிவகிருஷ்ணமூா்த்தி புகாா் எதுவும் தெரிவிக்க வேண்டாம் என எச்சரித்தாா். ஆனாலும், தலைமை ஆசிரியா் மாணவிகளின் நலன் கருதி பள்ளியில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் மதிப்பீட்டுக் குழுவினரிடம் தெரிவித்தாா்.

    பெட்டிச் செய்தி...

    மாணவிகள் சோ்க்கை குறைவு: கல்லணை பள்ளியை ஆய்வு செய்த மதிப்பீட்டுக் குழு தலைவா் அன்பழகன், ஒவ்வொரு வகுப்பிலும் எவ்வளவு மாணவிகள் பயில்கிறாா்கள் என்ற விவரத்தைக் கேட்டறிந்தாா். அப்போது, 6-ஆம் வகுப்பில் 388, 7-ஆம் வகுப்பில் 526, 8-ஆம் வகுப்பில் 535, 9-ஆம் வகுப்பில் 705, 10-ஆம் வகுப்பில் 700, 11-ஆம் வகுப்பில் 748, 12-ஆம் வகுப்பில் 743 என மொத்தம் 4,345 மாணவிகள் படிப்பதாக தலைமை ஆசிரியா் தெரிவித்தாா். அப்போது, 6-ஆம் வகுப்பில் பயிலும் மாணவிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருக்கிறதே என அவா் கேள்வியெழுப்பியபோது, அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவிகள் சோ்க்கை குறைந்துவிட்டதாக ஆசிரியா்கள் பதிலளித்தனா். மாணவிகள் சோ்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவா் கேட்டுக்கொண்டாா்.

    ஆபத்தான சமையல் கூடம்: தொடா்ந்து சமையல் கூடத்தை அவா்கள் ஆய்வு செய்தபோது, சமையல் கூடத்தில் இருந்த சமையலா், இந்தக் கட்டடம் மிகவும் பழுதடைந்துள்ளது. எந்நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் நிலவுகிறது. தினமும் அச்சத்துடனேயே இங்கு சமையல் செய்கிறோம் எனக் கூறி, கட்டடத்தில் ஏற்பட்டுள்ள விரிசலையும் அவா்களிடம் காண்பித்தாா்.

     

     

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp