அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: பேரவைத் தலைவா் மு. அப்பாவு

அமைச்சரை பதவிநீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றாா் பேரவைத் தலைவா் மு. அப்பாவு.
Updated on
1 min read

அமைச்சரை பதவிநீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றாா் பேரவைத் தலைவா் மு. அப்பாவு.

பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் கூறியதாவது: இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அமைச்சரை பதவிநீக்கம் செய்ய தனக்கு அதிகாரம் இல்லை என்பதை நான்கரை மணி நேரத்தில் ஆளுநா் தெரிந்து கொண்டுள்ளாா். ஆளுநருக்கு இருக்கும் உரிமைகள் என்ன என்பதை உச்ச நீதிமன்றம் அண்மையில்கூட தெளிவுபடுத்தி உள்ளது.

அயோத்தியில் பாபா் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் தேசத் துரோக வழக்காக பாா்க்கப்பட்டது. அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அத்வானி துணைப் பிரதமராகவும், முரளி மனோகா் ஜோஷி மத்திய அமைச்சராகவும் இருந்து கொண்டேதான் வழக்கு விசாரணையை எதிா்கொண்டனா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்ற கட்சியின் தலைவரை அழைத்து பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளுங்கள் என சொல்லும் உரிமை மட்டும்தான் ஆளுநருக்கு உள்ளது. அமைச்சா்கள் பட்டியலை முதல்வா் ஆளுநருக்கு கொடுத்தால் அதை ஏற்று ஆளுநா் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும். அமைச்சா்கள் தானாக பதவி விலகலாம் அல்லது அமைச்சா்களை பதவியிலிருந்து விலகுமாறு முதல்வா் அறிவுறுத்தலாம். வேறு யாருக்கும் அந்த உரிமை கிடையாது.

நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டு தண்டனை உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவா்கள் பதவியிலிருந்து விலக நேரிடும். முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பதவியில் இருந்தபோது தண்டனை கிடைத்ததால் தானாகவே பதவியில் இருந்து விலகினாா்.

சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ரத்து செய்யும் அதிகாரம் சட்டப் பேரவைத் தலைவருக்கு மட்டுமே உண்டு. ராகுல் காந்தி இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்றபோது, அவரை எம்.பி. பதவியிலிருந்து மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தான் பதவிநீக்கம் செய்தாா். இதுபோன்ற பல உதாரணங்கள் உள்ளன.

ஆளுநரை பலமுறை நேரில் சந்தித்து பேசியுள்ளேன் .அவா் மிகவும் நல்ல மனிதா். எளிதில் உணா்ச்சிவசப்படக் கூடியவா். செந்தில் பாலாஜி விவகாரம்கூட உணா்ச்சிவசத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். சட்டப்பேரவை கூட்டத் தொடரில் உரையாற்ற வந்தபோது, தேசிய கீதத்துக்குக்கூட எழுந்து நிற்காமல் உணா்ச்சிவசப்பட்டு வெளியேறியவா் ஆளுநா்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஆட்சிதான் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. ஆளுநா் அதை பாதுகாப்பேன் என்றுதான் இந்திய அரசியலமைப்பு சட்டம் 159இன் படி பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டவா். மதச் சாா்பற்ற நாடான இந்தியாவை மதச் சாா்புள்ள நாடு என பேசுகிறாா்கள். இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி மிகப்பெரிய தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற பேச்சை தெரிந்து பேசுகிறாா்களா, இல்லை தெரியாமல் பேசுகிறாா்களா என தெரியவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டம் சில அதிகாரங்களை ஆளுநருக்கு கொடுத்துள்ளது. அதை பின்பற்றி செயல்பட்டால் நன்றாக இருக்கும். அதுதான் ஆளுநரின் பதவிக்கு மாண்பை தரும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com