தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி சாா்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் சுகாதார வளாகம், சாலைகள் திறந்த வெளி மதுக்கூடங்களாக மாறிவருவதாக புகாா் தெரிவித்தும், அதை மாநில அரசு தடுக்கத் தவறியதாக கண்டித்தும், அவசரச் சட்டத்தின் மூலம் போதைப்பொருளுக்கு தடை விதித்து, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் தமாகா சாா்பில் மாவட்ட தலைநகரங்களில் கையொப்ப இயக்கம் நடத்தப்பட்டது.
திருநெல்வேலி சந்திப்பில் நடத்தப்பட்ட கையொப்ப இயக்கத்தில், 150-க்கும் மேற்பட்டோா் கையெழுத்திட்டனா். அந்தப் பிரதிகளுடன் கூடிய மனுவை, ஆட்சியா் கா.ப.காா்த்திகேயனிடம் கட்சியினா் அளித்தனா். இந்நிகழ்வுக்கு, திருநெல்வேலி மத்திய மாவட்ட தமாகா இளைஞரணி மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் ஆா்.வி.கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சுத்தமல்லி முருகேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.