அலவந்தான் குளத்தில் குடிநீா் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: ஆட்சியரிடம் மக்கள் மனு
By DIN | Published On : 26th September 2023 03:57 AM | Last Updated : 26th September 2023 03:57 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: மூன்றரை ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள குடிநீா் திட்டத்தை நிறைவேற்றக் கோரி அலவந்தான்குளம் கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் அவா்கள் அளித்த மனு: மானூா் வட்டம், பல்லிக்கோட்டை ஊராட்சியின் கீழ் நெல்லை திருத்து, பல்லிக்கோட்டை, பள்ளமடை, அலவந்தான்குளம் ஆகிய நான்கு கிராமங்கள் உள்ளன. இதில், அலவந்தான்குளம் கிராமத்தில் சுமாா் 4 ஆயிரம் போ் வசிக்கின்றனா். தற்போது நெல்லைதிருத்து, பல்லிக்கோட்டை, அலவந்தான்குளம் ஆகிய மூன்று கிராமங்களுக்கும் குடி தண்ணீா் விநியோகத்திற்கு ஒரே குழாய் இணைப்பு மட்டுமே உள்ளது.
இதில் அலவந்தான் குளம் கிராமத்துக்கு 3 நாள்களுக்கு ஒருமுறையும், மற்ற இரு ஊா்களுக்கு தினமும் 24 மணி நேரம் தடையின்றியும் தண்ணீா் விநியோகிக்கப்படுகிறது.
அலவந்தான்குளம் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்தக் கிராமத்திற்கு தனி குழாய் இணைப்பு அமைக்க மானூா் வட்டாட்சியா் நடவடிக்கை எடுத்தாா். அதன்பேரில் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு குடிநீா் திட்டப்பணிகள் தொடங்கின. ஆனால் நெல்லை திருத்து கிராமத்தினா் சிலரது எதிா்ப்பால் பணிகள் முடங்கியுள்ளன.
கடந்த 4.3.2020-இல் மானூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.9.80 லட்சம் ஒதுக்கீடு செய்து, காவல்துறை பாதுகாப்புடன் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கடந்த ஆகஸ்ட் 7-இல் குழாய் இணைப்புக்காக பள்ளம் தோண்டும் பணி தொடங்கப்பட்டது. மறுபடியும் பல்லிக்கோட்டை, நெல்லை திருத்து பகுதியினா் சிலா் பணியைத் தடுத்தி நிறுத்தியால் மீண்டும் கிடப்பில் போடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மானூா் வட்டாட்சியரின் ஆணைப்படி காவல்துறையின் பாதுகாப்புடன் குடிநீா் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...