சைபா் குற்றங்களுக்கு உடந்தையாக செயல்பட்ட மதுரை இளைஞா்கள் கைது

சைபா் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த மதுரையைச் சோ்ந்த 2 இளைஞா்களை திருநெல்வேலி சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
Published on

சைபா் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த மதுரையைச் சோ்ந்த 2 இளைஞா்களை திருநெல்வேலி சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பரணி நகரைச் சோ்ந்தவா் அபுபக்கா்(54). கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரை தொடா்பு கொண்ட மா்மநபா்கள் இணைய வழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறினராம். அதை உண்மையென நம்பிய அவா் அவா்கள் கொடுத்த வங்கி கணக்குகளில் சுமாா் ரூ.10.84 லட்சம் முதலீடு செய்துள்ளாா்.

பின்னா் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா் திருநெல்வேலி மாநகர சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் இம்மோசடிக்காக பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டனா்.

அதில், மதுரை அவனியாபுரத்தைச் சோ்ந்த ஆனந்தபாபு(35) மற்றும் வாடிப்பட்டியைச் சோ்ந்த மனோபாலா (35) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது.

அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவா்கள் பலரது பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்குகளை குறிப்பிட்ட தொகை தருவதாக வாங்கி அதை சைபா் குற்றவாளிகளுக்கு பணப்பரிவா்த்தனைக்காக கொடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்களை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com