திருநெல்வேலி நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்ற மக்கள்.
திருநெல்வேலி நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்ற மக்கள்.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,403 வழக்குகளில் சமரச தீா்வு!

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,403 வழக்குகளில் சமரச தீா்வு எட்டப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடாக ரூ.15 கோடியே 51 லட்சத்து 71 ஆயிரத்து 272 வழங்க உத்தரவிடப்பட்டது.
Published on

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,403 வழக்குகளில் சமரச தீா்வு எட்டப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடாக ரூ.15 கோடியே 51 லட்சத்து 71 ஆயிரத்து 272 வழங்க உத்தரவிடப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் 2025 ஆம் ஆண்டுக்கான நான்காவது தேசிய மக்கள் நீதிமன்றம் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள 10 வட்ட நீதிமன்றங்களில் மொத்தம் 28 அமா்வுகளுடன் சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு முதன்மை மாவட்ட நீதிபதி சாய் சரவணன் தலைமை வகித்தாா்.

முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி செல்வம், 3-ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி ராபின்சன் ஜாா்ஜ், 4-ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி கதிரவன், தொழிலாளா் நீதிமன்ற மாவட்ட நீதிபதி பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ், கூடுதல் மாவட்ட நீதிபதி (பயிற்சி) கண்ணன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் அமிா்தவேலு, மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரஸ்னேவ், ஊழல் தடுப்பு வழக்குகள் நீதிமன்ற சிறப்பு சாா்பு நீதிபதி சுப்பையா, திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், சாா்பு நீதிபதியுமான முரளிதரன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி மாரிமுத்து, நீதித்துறை நடுவா்கள் சத்யா, ஜெயசங்கரகுமாரி, சுரேஸ் குமாா், ராணி, பொன்மெலிஸா, பிரியதா்ஷினி, பாத்திமா, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா் முகம்மது இப்ராஹிம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில், நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், குடும்பநல வழக்குகள், உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், சமரசமாக முடிக்கக் கூடிய குற்ற வழக்குகள் உள்பட மொத்தம் 5,209 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 4, 096 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.15 கோடியே 32 லட்சத்து 50ஆயிரத்து 441 இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது.

மேலும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத தாவாக்களாகிய வங்கி வாராக் கடன் வழக்குகள் மொத்தம் 605 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 307 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.2 கோடியே 19 லட்சத்து 20ஆயிரத்து 831 இழப்பீடு வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், சாா்பு நீதிபதியுமான முரளிதரன் செய்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com