ரஷிய நாட்டிலிருந்து கூடங்குளம் அணுஉலைக்கு வந்த யுரேனியம் எரிபொருள்
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள 3ஆவது அணுஉலைக்கு மேம்படுத்தப்பட்ட யுரேனியம் அணு எரிபொருள் ரஷிய நாட்டிலிருந்து கூடங்குளம் அணுஉலைக்கு வெள்ளிக்கிழமை இரவு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் பலத்த பாதுகாப்புடன் வந்து சோ்ந்தது.
ரஷிய நாட்டின் கூட்டாண்மையுடன் உருவாக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தில் ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட 2 அணுஉலைகள் செயல்பட்டு வருகிறது.
இதுதவிர 3 மற்றும் 4 ஆவது அணுஉலைகள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது.
இதில், 3ஆவது அணுஉலைக்கான கட்டுமானப் பணிகள்முடிவடைந்து மின் உற்பத்தி செய்வதற்கான நிலையை எட்டியுள்ளது.
வழக்கமாக அணுஉலைகளில் ஆண்டுக்கொரு முறை எரிபொருள்கள் மாற்றப்படுவது நடைபெற்று வருகிறது. தற்போது தொழில்நுட்ப முன்னேற்றத்தை அடுத்து 18 மாதங்களுக்கு ஒருமுறை மட்டும் எரிபொருள் மாற்றக் கூடிய மேம்பாட்டு நிலையை கூடங்குளம் அணுமின் நிலையம் எட்டியுள்ளது.
அந்த வகையில்தான் 3ஆவது அணுஉலைக்கு 18 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றக் கூடிய வகையிலான மேம்படுத்தப்பட்ட எரிபொருள் (யுரேனியம் எரிகோல்கள்) வந்துள்ளது.
இதை, ரஷிய நாட்டிலுள்ள அணுசக்தி கழகம் ரோசாட்டம் விமானம் மூலம் அனுப்பியுள்ளது.
இனி செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருளானது ஒரு ஆண்டுக்குப் பதிலாக 18 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றினால் போதுமானது என அணுஉலை வட்டாரத்தில் தெரிவித்தனா்.
தற்போது, இரண்டாவது அணு உலையில், பராமரிப்புப் பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
