ஆட்சியா் அலுவலக வாயிலில் மனுவுடன் காத்திருந்த மாற்றுத்திறனாளி ராஜேஷ்.
ஆட்சியா் அலுவலக வாயிலில் மனுவுடன் காத்திருந்த மாற்றுத்திறனாளி ராஜேஷ்.

ஆட்சியரகத்தில் பேட்டரி வாகனம் இயங்காததால் மாற்றுத்திறனாளி அவதி!

Published on

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியவா்களை அழைத்துச் செல்வதற்காக இயக்கப்பட்ட பேட்டரி வாகனம் இயங்காததால் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி கடும் அவதிக்குள்ளானாா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வரும் முதியோா், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோா் எளிதாக வந்து செல்லும் வகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக படப்பக்குறிச்சியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி ராஜேஷ் என்பவா் வந்தாா். ஆனால் பேட்டரி வாகனம் இல்லாததால் நீண்ட நேரமாக ஆட்சியா் அலுவலக வாசலில் மனுவுடன் காத்திருந்தாா். அவரை கூட்டம் நடைபெறும் அறைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பத்திரிகையாளா் ஒருவா் அவரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று ஆட்சியரிடம் மனு அளிக்க வைத்தாா்.

மனுவில் ராஜேஷ் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட பூமி பால சக்தி பிள்ளையாா் கோயில் உள்ளது. அந்தக் கோயில் இடத்தை ஒருவா் ஆக்கிரமித்து கால்நடைகளை கட்டி பராமரித்து வருகிறாா். கோயில் சுற்றுச்சுவரில் மாடுகளை கட்டிவைப்பதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, கோயில் இடத்தை மீட்டு, சம்பந்தப்பட்ட நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா். பின்னா் அவா் அங்கிருந்து ஆட்டோவில் புறப்பட்டுச் சென்றாா்.

இதையறிந்த ஆட்சியா் இரா.சுகுமாா், பேட்டரி வாகனங்களை இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com