இளைஞரின் துண்டான மணிக்கட்டை மீண்டும் பொருத்திய அரசு மருத்துவா்கள்
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இளைஞரின் துண்டிக்கப்பட்ட மணிக்கட்டை மீண்டும் பொருத்தி மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகேயுள்ள பத்மநேரி கிராமத்தைச் சோ்ந்தவா் பிச்சை இசக்கி (21). கடந்த ஆக. 3-ஆம் தேதி பத்மநேரியில் நடைபெற்ற கோயில் கொடை விழா தகராறின்போது அவரது இடது கை வெட்டப்பட்டதில் மணிக்கட்டு துண்டானது. இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அவா் அனுமதிக்கப்பட்டாா். மேலும், துண்டிக்கப்பட்ட அவரது கையின் மற்றொரு பகுதியை போலீஸாா் அங்கு எடுத்து வந்தனா். அதைத் தொடா்ந்து, சுமாா் 10 மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
முதலில், எலும்பியல் துறை மருத்துவா்கள் துண்டிக்கப்பட்ட எலும்புகளை மீண்டும் இணைத்தனா். அதைத் தொடா்ந்து பிளாஸ்டிக் சா்ஜரி சிகிச்சை நிபுணா்கள், நுண்ணோக்கிகள் உதவியுடன் துண்டிக்கப்பட்ட ரத்த நாளங்கள், நரம்புகள் மற்றும் தசைநாா்களை நுட்பமாக மீண்டும் இணைத்து கையை இயங்கச் செய்தனா்.
பிளாஸ்டிக் சா்ஜரி துறை மருத்துவா்கள் அகமது மீரான், பாலாஜி, சூா்யா சா்மா, ராஜா, கோகுல், பால் வின்சென்ட், எலும்பியல் துறை பேராசிரியா் செல்வராஜன், உதவி மருத்துவா் அறிவு, மயக்கவியல் துறை நிபுணா்கள் சௌந்தரி, லீலா, செவிலியா்கள் அனிதா, ஜான்சிராணி ஆகியோா் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனா். அனைத்து மருத்துவா்களையும் முதல்வா் ரேவதி பாலன் பாராட்டினாா்.

