‘மீனவா்கள் மறுஉத்தரவு வரும் வரையில் கடலுக்கு செல்ல வேண்டாம்’
வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் மறுஅறிவிப்பு வரும் வரையில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என மீன்வளத்துறை உதவி இயக்குநா் அறிவித்துள்ளாா்.
வடகிழக்கு பருவமழை அறிவிப்பை அடுத்து மன்னாா்வளைகுடா கடல்பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பிருப்பதால் கடலில் காற்றின் வேகம் வழக்கத்தை விட 3 மடங்கு அதிகமாக இருக்கும். மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரையில் கடலுக்கு செல்லவேண்டாம் என ராதாபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குநா் ராஜதுரை அறிவித்துள்ளாா்.
இதனையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூட்டப்பனை, உவரி, இடிந்தகரை, விஜயாபதி, கூத்தங்குழி, பெருமணல், கூடுதாழை, கூட்டப்புளி, பஞ்சல், தோமையாா்புரம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களிலுள்ள மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை. கடலில் விரித்து வைத்துள்ள வலைகளை எடுத்து வருவதற்காக சில மீனவா்கள் கடலுக்கு சென்றனா். அவா்களும் வந்த பிறகு கடலுக்கு செல்வதில்லை என மீனவா் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனா்.
