முன்னாள் ஊராட்சித் தலைவர் கொலை வழக்கில் இளைஞர் கைது
கயத்தாறு அருகே முன்னாள் ஊராட்சித் தலைவரை கம்பால் தாக்கி கல்லால் அடித்துக் கொலை செய்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கயத்தாறையடுத்த வடக்கு இலந்தைகுளம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் பூலையா மகன் முன்னாள் ஊராட்சித் தலைவர் பாண்டி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் காளிராஜ்(27) என்பவரை ஒரு பெண்ணை காதல் செய்த விவகாரம் தொடர்பாக கண்டித்தாராம். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில், வெள்ளிக்கிழமை அப்பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த பாண்டியை, காளிராஜ் கம்பால் தாக்கி, கல்லால் அடித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்து, காளிராஜை தேடி வந்தனர்.
இந்நிலையில், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார் சனிக்கிழமை இரவு திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கட்டாலங்குளம் விலக்கு அருகே சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்த போது அவர், முன்னாள் ஊராட்சித் தலைவர் பாண்டியை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த காளிராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.