கோவில்பட்டி, திருச்செந்தூரில் உலக எய்ட்ஸ் தினத்தை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
கோவில்பட்டியில் குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் சார்பில் நடைபெற்ற இப்பேரணிக்கு நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் சுப்பாராஜு தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார். பள்ளி முன்பிருந்து புறப்பட்டஇப் பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளி வந்தடைந்தது.
பேரணியில், எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கோஷங்களை எழுப்பியபடி பேரணியில் பங்கேற்றனர். மேலும், பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளுக்கு எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அரசு மருத்துவமனை, செட்கோ நிறுவனம் மற்றும் சிவந்தி ஆதித்தனார் செவியலியர் கல்லூரி இணைந்து நடத்திய இப்பேரணியை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் த.பொன்ரவி தலைமை வகித்து கொடியசைத்து தொடங்கிவைத்தார். மருத்துவமனை முன்பிருந்து தொடங்கிய இப் பேரணி காமராஜர்சாலை, ரதவீதிகள் வழியாக வந்தது.
பேரணியில் மருத்துவர்கள் மார்ட்டின், சரஸ்வதி, அரவிந்த், செட்கோ திட்ட மேலாளர் ஆஸ்டின், கல்லூரி ஆசாரியைகள் பென்னரசி, சுஜிதா, சங்கீதா, ஸ்வேதா, சங்கரம்மாள், உமாதேவி, கோமதி மற்றும் மாணவியர்கள் கலந்து கொண்டனர்.