தூத்துக்குடி மாவட்டத்தில் மின்னணு குடும்ப அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ள சனிக்கிழமை (டிச. 9) வட்டாட்சியர் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் டிசம்பர் மாதத்துக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. முகாமின்போது, மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் நீக்குதல், சேதமடைந்துள்ள அல்லது தொலைந்துபோன மின்னணு குடும்ப அட்டைக்கு புதிய மின்னணு அட்டை பெறுதல் போன்ற குறைகள் முகாமிலேயே உடனுக்குடன் சரிசெய்து வழங்கப்பட உள்ளது.
மேலும் மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தரவுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியது இருந்தால் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். முகாமில் பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.