கோவில்பட்டி நகராட்சி சங்கரலிங்கபுரம் மேற்கு 1ஆவது தெரு பகுதியில் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் திங்கள்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சங்கரலிங்கபுரம் 5ஆவது வார்டு மேற்கு 1ஆவது தெரு பகுதியில் சுமார் 30 வீடுகள் உள்ளதாம். இந்த வீடுகளுக்கு சுமார் 15 நாள்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்படும் சீவலப்பேரி குடிநீர் இப்பகுதி மக்களுக்கு கடந்த 3 மாத காலமாக விநியோகிக்கப்படவில்லையாம்.
மேற்கு 1ஆவது தெரு பகுதி மேட்டுப் பகுதியாக இருப்பதால் குடிநீர் குழாயில் குடிநீர் விநியோகம் முறையாக இல்லையாம். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததையடுத்து, அப்பகுதி பெண்கள் காங்கிரஸ் நகரத் தலைவர் சண்முகராஜ் தலைமையில், காலிக் குடங்களுடன் நகராட்சி அலுவலகம் முன் திரண்டனர். பின்னர், தங்கள் பகுதிக்கு முறையாக ஆய்வு செய்து சீரான குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி பொறியாளர் சுப்புலட்சுமியிடம் முறையிட்டனர். அதையடுத்து, நகராட்சி பொறியாளர், தங்கள் பகுதியில் முறையாக ஆய்வு செய்து, சீரான குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று கூறியதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.