தூத்துக்குடி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் தாமஸ் பாண்டியன் தலைமை வகித்தார். மக்களவை உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர். சுந்தரராஜ், உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் சி.த. செல்லப்பாண்டியன் பேசினார். கூட்டத்தின்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரண்டு நிமிஷங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அதிமுக நிறுவனர், தலைவர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை மாவட்டம் முழுவதும் கொண்டாடுவது என்றும் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜனவரி 8 ஆம் தேதி பொதுச்செயலர் சசிகலா தலைமையில் நடைபெறும் கலந்தாய்வுக் கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்வது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக் கூட்டத்தில், மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர் பிடிஆர் ராஜகோபால், எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலர் செல்லத்துரை, வழக்குரைஞர் பிரிவு மாவட்டச் செயலர் யு.எஸ். சேகர், மீனவரணி செயலர் டார்சன், பகுதி செயலர்கள் முருகன், ராமகிருஷ்ணன், பொன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.