தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சி பாதிப்புகள் குறித்து 58 கிராமங்களில் அதிகாரிகள் குழுவினர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என்றார் ஆட்சியர் ம.ரவிகுமார்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 68 சதவீதம் மழையளவு குறைவாக பெய்துள்ளது. 662 மில்லி மீட்டர் அளவுக்கு பெய்ய வேண்டிய மழையானது கடந்த ஆண்டில் 212 மில்லி மீட்டர் மட்டுமே பெய்துள்ளது. 405 மில்லி மீட்டர் குறைவாக மழை பெய்துள்ளது. மழையளவு குறைந்துள்ள நிலையில் மாவட்டம் தோறும் விவசாய பயிர் பாதிப்பு குறித்து நிலவியல் பயிர் ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, நிலவியல் பயிர் ஆய்வுக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் 58 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வருவாய்த் துறை கொண்ட குழுவினர் பயிர் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று நிலவியல் பயிர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அந்தப் பணிகளை வருவாய் கோட்டாட்சியர்கள் கண்காணிப்பர். இந்த ஆய்வு அறிக்கை 9 ஆம் தேதி அரசிடம் தாக்கல் செய்யப்படும். ஆய்வின் போது விளை நிலங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களின் நிலைமை குறித்த புகைப்படங்கள் களத்தில் இருந்தே செயற்கோள் உதவியுடன் மத்திய, மாநில அரசுகளுக்கு உடனுக்குடன் அனுப்பட்டு வருகிறது. இம் மாவட்டத்தில் தற்போது வரையிலும் 19 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் உள்ளது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் பணியில் நிரந்தரமாக குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் அவர்.