தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்ற 9ஆம் வகுப்பு மாணவி திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
தூத்துக்குடி தருவை மைதானத்தில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கில் "கேலோ இந்தியா' திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
தடகளம், வாலிபால், நீச்சல், குத்துச்சண்டை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் ஏராளமான மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர். இதில், 14 வயதுக்குள்பட்டோருக்கான குத்துச் சண்டை போட்டியில் தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்த கென்னடி- ஈஸ்வரி தம்பதியின் மகள் மாரீஸ்வரி (13) கலந்து கொண்டார். சோரீஸ்புரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவியான இவர், முதல் சுற்றில் போட்டியாளரை எதிர்த்து ஒன்றரை நிமிடம் விளையாடினார். அப்போது, போட்டியில் பங்கேற்ற இருவரும் தடுப்பாட்டமே ஆடினராம். இதையடுத்து, 30 விநாடிகள் ஓய்வு அளிக்கப்பட்டது.
அப்போது, மாணவி மாரீஸ்வரி திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் மாரீஸ்வரியின் தாய் ஈஸ்வரி உள்ளிட்டோர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், மயக்கம் தெளியாத அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரீஸ்வரி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
தகவலறிந்த மாரீஸ்வரின் உறவினர்கள் ஏராளமானோர் அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். இச் சம்பவம் தொடர்பாக சார்
ஆட்சியர் தீபக் ஜேக்கப், மாநகர காவல் உதவி கண்காணிப்பாளர்
செல்வநாகரத்தினம் ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.