கோவில்பட்டி உணவகத்தில் வாடிக்கையாளரின் நகை மற்றும் செல்லிடப்பேசியை திருடியதாக, அதன் ஊழியரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
கயத்தாறையடுத்த தேவர்குளம் பன்னீர்ஊற்று பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் மாரிராஜ்(36). இவர், கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள உணவகத்தில் உறவினர் சண்முகையா என்பவருடன் சேர்ந்து புதன்கிழமை சாப்பிட்டாராம்.
பின்னர், அவர் தனது கைப்பையை மேஜை மீது வைத்துவிட்டு கை கழுவ சென்றாராம் அப்போது, பையிலிருந்த மூன்றரை பவுன் தங்க நகை மற்றும் செல்லிடப்பேசியை உணவக ஊழியரான கோவில்பட்டி சாஸ்த்ரி நகர் குருசாமி மகன் வெங்கடேஷ்(26) திருடினாராம். இதைப் பார்த்த மாரிராஜ், அவரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தார். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து வெங்கடேஷை கைது செய்து நகை மற்றும் செல்லிடப்பேசியை மீட்டனர்.