தூத்துக்குடியில் மனைவி மீது வெந்நீர் ஊற்றி கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.
தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்தவர் சுடலைமணி (29). இவர், வாகைகுளத்தில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சர்மிளா (24). தம்பத்திக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். கடந்த 6.12.2014இல் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த சுடலைமணியிடம் சர்மிளா பணம் கேட்டாராம். அப்போது ஏற்பட்ட தகராறில், அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த வெந்நீரை எடுத்து சர்மிளா மீது ஊற்றிவிட்டாராம். உடலில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சர்மிளா உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த முத்தையாபுரம் போலீஸார், சுடலைமணியை கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயராஜன், குற்றம்சாட்டப்பட்ட சுடலைமணிக்கு ஆயுள் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.