ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடியில் நீதிமன்றம் முன் வழக்குரைஞர்கள் சிலர் சேவல் சண்டை போட்டியை நடத்தினர். இதையடுத்து போலீஸார் 2 சேவல்களைப் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர், மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மைதானத்தில் கடந்த 5 நாள்களாக மாணவர்,மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடி வழக்குரைஞர்கள் சிலர் வழக்குரைஞர் சுரேஷ்குமார் தலைமையில் தூத்துக்குடி நீதிமன்றம் முன் தடையை மீறி சேவல் சண்டை சனிக்கிழமை நடத்தினர். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பலர் சேவல் சண்டை போட்டியைப் பார்த்து ரசித்தனர். இதற்கிடையே, தடையை மீறி சேவல் சண்டை போட்டியை நடத்தியதாகக் கூறி வழக்குரைஞர்கள் மீது வழக்குப் பதிந்த தென்பாகம் போலீஸார் 2 சேவல்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டுச் சென்றனர்.