கயத்தாறு அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் தொடர்புடைய லாரி ஓட்டுநரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கயத்தாறையடுத்த அய்யனாரூத்து அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முருகையா மகன் சீனிப்பாண்டி (21).
கருப்புக்கட்டி வியாபாரியான இவர், சனிக்கிழமை அதே ஊரில் உள்ள தேநீர் கடைக்குச் சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த சந்தி தெருவைச் சேர்ந்த அவரது உறவினரும், லாரி ஓட்டுநருமான பரமசிவன் மகன் அண்ணாமலை (38), சீனிப்பாண்டியை அரிவாளால் வெட்டினாராம். இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரை தேடி வந்தனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கயத்தாறு மணிமண்டபம் அருகே அண்ணாமலை பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து, காவல் ஆய்வாளர் சபாபதி தலைமையில் போலீஸார் சென்று அங்கு பதுங்கியிருந்த அவரை கைது செய்து, அவரிடமிருந்த அரிவாள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.