திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் உண்டியல் காணிக்கை செலுத்த வசதியாக கனரா வங்கி சார்பில் ஸ்வைப்பிங் இயந்திர வசதி செய்யப்பட்டுள்ளது.
கோயில் சண்முக விலாச மண்டபத்தில் 2 இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் செயல்பாடு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. கோயில் இணை ஆணையர் தா. வரதராஜன் தலைமை வகித்தார். கனரா வங்கி அதிகாரி கே.மகேந்திரன் இயந்திரத்தின் செயல்பாட்டைத் தொடக்கிவைத்தார். பின்னர் அவர் கூறியது:
டிஜிட்டல் இந்தியா திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கில் கோயில் நிர்வாகம் எடுத்த நடவடிக்கைப்படி எங்கள் வங்கி மூலம் இரு ஸ்வைப்பிங் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. பக்தர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் பக்தர்கள் கைகளில் அதிக ரொக்கம் எடுத்துவரும் சிரமம் தவிர்க்கப்படும். அவர்கள் செலுத்தும் காணிக்கை உடனடியாக கோயில் கணக்கில் வரவாகும்.
பொதுவாக ஸ்வைப்பிங் இயந்திரங்கள் பயன்படுத்தும் வணிக நிறுவனத்திடமிருந்து வங்கிகளினால் மாதக் கட்டணம், பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் கோயில் நிர்வாகத்துக்கு கட்டணம் வசூலிக்காமல் இலவச சேவை வசதி செய்துள்ளோம் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் திருச்செந்தூர் கனரா வங்கி முதுநிலை மேலாளர் மு.ரத்தினசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.