மத்திய அரசைக் கண்டித்து சிஐடியூ அமைப்பு சார்பில் தூத்துக்குடியில் 23 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது.
மத்திய அரசின் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தூத்துக்குடி சிஐடியூ அமைப்பு சார்பில் பணத்தட்டுப்பாடு எதிர்ப்பு நடவடிக்கை குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு சார்பில், பாளையங்கோட்டை சாலையில் செவ்வாய்க்கிழமை (ஜன. 31) மனிதச் சங்கிலி நடைபெறுகிறது. இதன் ஒருபகுதியாக சிஐடியூ அமைப்பு மற்றும் பணத்தட்டுப்பாடு எதிர்ப்பு நடவடிக்கை குழு ஆகியவை சார்பில் தூத்துக்குடியில் 23 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது.
தூத்துக்குடி பிரையன்ட் நகர் 7ஆவது தெருவில் தொடங்கிய பிரசாரம் மாநகரின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சிஐடியூ மாநிலச் செயலர் ஆர். ரசல், நிர்வாகிகள் பாலசுப்பரமனியன், பொன்ராஜ், அன்டோ, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் முத்து, கண்ணண், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் தமிழரசன், சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.