எட்டயபுரத்தில் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே வீட்டில் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இளம்புவனம் கிராம பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வட்டாட்சியர் பாக்யலட்சுமி அளித்த உறுதிமொழிக்கு மாறாக வெள்ளிக்கிழமை அந்த கடையை திறந்து ஊழியர்கள் மது விற்பனையை தொடங்கினர். இதையறிந்த மக்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் கடையை மூடிவிட்டு வெளியேறினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களில் சிலர் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்தனர். இதையடுத்து அவர்கள் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டச் செயலர் ரவீந்திரன், வட்டக் குழு உறுப்பினர்கள் நடராஜன், மூக்கையா, பாஜக ஒன்றியத் தலைவர் ராம்கி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.