தனியார் பேருந்து மோதி கட்டட தொழிலாளி சாவு
கோவில்பட்டியையடுத்த கருங்காலிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதியதில் கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 3ஆவது தெருவைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் கட்டடத் தொழிலாளி ஜெயபால்(44). இவர் கோவில்பட்டியிலிருந்து எட்டயபுரத்திற்கு வியாழக்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, கருங்காலிப்பட்டி விலக்கு அருகே, எதிரே விளாத்திகுளத்திலிருந்து கோவில்பட்டி நோக்கி வந்த தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஜெயபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற நாலாட்டின்புத்தூர் போலீஸார் சடலத்தை கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து, தனியார் பேருந்து ஓட்டுநர் விளாத்திகுளத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் சண்முகராஜை(37) கைது செய்தனர்.