தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அஞ்சல் தலை கண்காட்சியை ஏராளமான மாணவர், மாணவிகள் பார்வையிட்டனர்.
தேசிய அஞ்சலக வாரவிழாவையொட்டி, தூத்துக்குடியில் உள்ள இந்திய வர்த்தக தொழிற்சங்க மையத்தில் அஞ்சல் தலை, அஞ்சல் உறை, பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் குறித்த கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கண்காட்சியை ஜெயன்ட் குரூப் அமைப்பின் மண்டல தலைவர் ஜெயகிருஷ்ணன் தொடங்கிவைத்து கண்காட்சியில் பங்குபெற்றவர்களுக்கு விருது வழங்கினார். தூத்துக்குடியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி கர்னல் சுந்தரம், சேலம் ரங்கநாத், சென்னையைச் சேர்ந்த மணி ஆகியோர் தங்களது சேகரிப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தனர். இந்திய ராணுவம் குறித்த அஞ்சல் தலைகள், சேரர், சோழர், பாண்டிய மன்னர் கால நாணயங்கள் உள்ளிட்டவை கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தன.
இந்தக் கண்காட்சியை பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர், மாணவிகள் ஏராளமானோர் பார்வையிட்டனர். கண்காட்சியில், ஜெயன்ட் குரூப் அமைப்பின் நிர்வாகிகள் செந்தில்கண்ணன், வழக்குரைஞர்கள் சொர்ணலதா, சுபாஷினி, உறுப்பினர்கள் அமுதா சீனிவாசன், மலர்விழி, காளி ஆனந்தகுமார், ரத்தனசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.