ஆன்-லைன் மூலமாக பத்திரப் பதிவு செய்வது குறித்து, பத்திர எழுத்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கான பயிற்சி முகாம், திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
முகாமை மாவட்ட பதிவாளர் சுந்தரேசன் தலைமை வகித்து தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் கூறியது: ஒரு பத்திரப் பதிவை 7 நிமிடங்களுக்குள் முடித்துவிடலாம். ஆன்-லைன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 57 பத்திரங்கள் வரை பதிவு செய்யலாம். ஆன்-லைனில் 36 வகையான பதிவுகளை மேற்கொள்ளலாம். இம்மாவட்டத்தில் முதலாவதாக கீழூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. செப்.18ஆம் தேதி காயல்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்திலும், தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள மற்ற பதிவு அலுவலகங்களிலும் செயல்படுத்தப்படும் என்றார் அவர்.
சென்னை டிசிஎஸ் நிறுவனத்தை சேர்ந்த சிந்துஜா தலைமையிலான குழுவினர் பயிற்சியளித்தனர். முகாமில், சார்பதிவாளர்கள் திருச்செந்தூர் ராஜேஷ், காயல்பட்டினம் ஜாக்குலின், பதிவுத்துறை உதவியாளர்கள் ஜெகதீஷ், ஜெபநேசன், பிரபாகர், ராஜா, பத்திர எழுத்தர்கள் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.