தமிழ் புத்தாண்டையொட்டி, உடன்குடி நடுக்காலன்குடியிருப்பு ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் இந்து சங்கம விழா நடைபெற்றது.
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரிப் பேராசிரியர் இரா. உதயவேல் தலைமை வகித்தார். கொட்டங்காடு தசரா குழுத் தலைவர் சுந்தரராஜன், கனகராஜ், உடன்குடி ஒன்றிய பாஜக தலைவர் திருநாகரன், பொதுச்செயலர் அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் உடன்குடி ஒன்றியத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களில் இருந்து கோயில் தர்மகர்த்தாக்கள் மற்றும் ஊர்மக்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு ஓவியம், கோலமிடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.மேலும் ஏராளமான பெண்கள் பங்கேற்று தமிழ் புத்தாண்டு வளமிக்கதாக அமைய வேண்டி அகல்விளக்கு ஏற்றி வழிபட்டனர். போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார், பாஜக மாவட்டச் செயலர் இரா. சிவமுருகஆதித்தன் ஆகியோர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர். ஏற்பாடுகளை இந்து கோயில் நிர்வாகிகள் குழுவினர் செய்திருந்தனர்.