கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி நாட்டுநலப் பணித் திட்டம், இயற்கை கழகம், கோவில்பட்டி சரக தமிழ்நாடு வனத்துறை, அகத்தியர் மலை மக்கள்சார் இயற்கை வள காப்பு மையம் மற்றும் சுற்றுச்சூழல் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துணிப்பைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதையொட்டி, குருமலை பொய்யாமொழி அய்யனார் கோயில் சித்திரைத் திருவிழாவிற்கு வருகை தந்துள்ள பொதுமக்கள் குப்பைகளை தற்காலிக குப்பைத் தொட்டிகளில் போடவேண்டும், பிளாஸ்டிக் பொருள்களை தவிர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சனிக்கிழமை விழிப்புணர்வு பேரணி குருமலையில் நடைபெற்றது.
குருமலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் மாணவர்கள் மற்றும் வனச்சரக அலுவலர் சிவ்ராம் ஆகியோர் இணைந்து வாகனச் சோதனை நடத்தினர். சித்திரை விழாவிற்கு குருமலை பொய்யாமொழி அய்யனார் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து, அதற்கு பதிலாக துணிப் பைகளை விநியோகித்தனர். இந்நிகழ்ச்சியில், டாக்டர் தாமோதரன், கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரிப் பேராசிரியர் மகேஷ்குமார், அகத்தியர் மலை மக்கள் சார் இயற்கை வள பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.