சிங்கப்பூரில் தொழில் தொடங்குவோருக்கு கிடைக்கும் சலுகைகள் குறித்த கருத்தரங்கம்
சிங்கப்பூரில் தொழில் தொடங்குவோருக்கு கிடைக்கும் சலுகைகள் குறித்த கருத்தரங்கம் தூத்துக்குடியில் அண்மையில் நடைபெற்றது.
தூத்துக்குடி இந்திய வியாபார தொழில் சங்கத்தின் சார்பில், சிங்கப்பூரில் தொழில் தொடங்குவது எப்படி? குறித்த கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. கருத்தரங்கில், சிங்கப்பூர் இந்திய வியாபார தொழில் சங்க முன்னாள் தலைவர் ஆடிட்டர் நாராயண மோகன் கலந்துகொண்டு பேசியதாவது:
சிங்கப்பூரில் வெளிநாட்டவர் புதிதாக தொழில் ஆரம்பித்தால் சிங்கப்பூர் குடியுரிமை வாசி ஒருவர் கண்டிப்பாக இயக்குநராக இருக்கவேண்டும். புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என பிற நாட்டு அரசை தொடர்பு கொண்டால், முதலில் சிங்கப்பூர் அரசிடமிருந்து தான் உங்களுக்கு பதில் வரும். இயக்குநர்களில் ஒருவர் மட்டும் சிங்கப்பூரிலும் மற்றவர் பிற நாட்டிலும் இருப்பதால் வரிச்சலுகையைப் பொருத்தவரையில் தீர்மானங்களை சிங்கப்பூரில் வைத்து நிறைவேற்றினால் நிச்சயம் சலுகைகள் கிடைக்கும் என்றார் அவர்.
கருத்தரங்கில், இந்திய வியாபார தொழில் சங்கத் தலைவர் ஜான்சன், செயலர் கோடீஸ்வரன், பொருளாளர் தர்மராஜ், துணைத் தலைவர் எட்வின் சாமுவேல், முன்னாள் தலைவர் நடராஜன், துணைத் தலைவர் ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.