கோவில்பட்டி அய்யனேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் நடந்த முறைகேட்டைக் கண்டித்து பாரதிய கிசான் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அய்யனேரி பகுதியில் பயிர் செய்யப்பட்ட விவசாயிகள் முறையாக பிரீமியம் தொகையை செலுத்தியும், அவர்களுக்கான காப்பீட்டுத் தொகை வழங்காமல் பயிர் செய்யப்படாத நிலங்கள், வீட்டுமனைப் பட்டா நிலங்களுக்கு அய்யனேரி கூட்டுறவு சங்கத்தில் பிரீமியம் தொகை பெறப்பட்டு அந்த நிலங்களுக்கு காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் பயிர் செய்து இழப்பீடு அடைந்த விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்தும், அய்யனேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற முறைகேட்டை முறையாக ஆய்வு செய்து கூட்டுறவு சங்க செயலர் மீதும், முறைகேட்டில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர் மீதும் முறையாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், போலியாக வழங்கப்பட்ட காப்பீட்டுத் தொகையை திரும்பப் பெற வலியுறுத்தியும், பாரதிய கிசான் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரெங்கநாயகலு தலைமையில் சங்கச் செயலர் சேசு, துணைத் தலைவர் பரமேஸ்வரன், இந்து மக்கள் கட்சி மாவட்டச் செயலர் லட்சுமிகாந்தன், பசு பாதுகாப்பு தலைவர் வைரவன் மற்றும் அப்பகுதி விவசாயிகள் கோட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒற்றைக் காலில் நின்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே சென்று தரையில் அமர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து, கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செல்லப்பாண்டியனிடம் மனு அளித்தனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட அவர், தங்கள் கோரிக்கைகள் குறித்து கோட்டாட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.