தூத்துக்குடியில் மார்ச் 20 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தூத்துக்குடி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் வட்டார, நகரத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் அருண்நேருராஜ் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் கனி முன்னிலை வகித்தார்.
தெற்கு மாவட்டத் தலைவர் எஸ்டிஆர் விஜயசீலன், மாநிலச் செயலர் சிந்தா சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தின்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தூத்துக்குடியில் 20 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், தூத்துக்குடி மாநகரில் சாலையோரங்களில் குவிந்துள்ள மணலை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், வட்டாரத் தலைவர்கள் முருகேசன், ராஜரத்தினம், முரசொலிமாறன், நயினார், இளையராஜா, மாநகரத் தலைவர் கிருஷ்ணன், வடக்கு மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ஜேம்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.