கோவில்பட்டி, கயத்தாறு, சாத்தான்குளத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இணையதள வசதிகளை உடனடியாக வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உடனே செய்ய வேண்டும். கூடுதல் பொறுப்பூதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்டத் தலைவர் அமர்ராஜ் தலைமை வகித்தார். செயலர் மந்திரசூடாமணி, பொருளாளர் லிங்கராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இதுபோல, கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில முதன்மை பொதுச்செயலர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். வட்டத் தலைவர் நெல்லையப்பன், செயலர் சுப்பையா, பொருளாளர் கல்யாணகுமார் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
சாத்தான்குளம்: வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க வட்டத் தலைவர் சுரேஷ்ராஜன் தலைமை வகித்தார். துணைச் செயலர் கந்தவள்ளிக்குமார், துணைத் தலைவர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்க வட்டத் தலைவர் பொன்சேகர், வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க வட்டத் தலைவர் சுவாமிநாதன் ஆகியோர் பேசினர். கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.