கழுகுமலை அருள்மிகு கழுகாசல மூர்த்தி கோயிலில் திருக்கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 8ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழா நாள்களில் தினமும் சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் காலை மற்றும் இரவில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது.
5ஆம் திருநாளான 12ஆம் தேதி தாரகாசூரனை சம்ஹாரம் செய்தலும், 13ஆம் தேதி சூரசம்ஹாரமும் நடைபெற்றன. வியாழக்கிழமை சுவாமி வெள்ளி மயில் வாகனத்திலும், தெய்வானை பிராட்டியார் பூஞ்சப்பரத்திலும் வீதியுலா வந்து, தவசு மண்டபத்தில் எழுந்தருளி தவசுக் காட்சி நடைபெற்றது.
9ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
சனிக்கிழமை இரவு சுவாமி வள்ளி, தெய்வானையுடன் பெரிய பல்லக்கிலும், சோமாஸ் கந்தர் சிறிய பல்லக்கிலும் வீதியுலாவும், பட்டணப்பிரவேசமும் நடைபெறுகின்றன.
ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் கந்தசஷ்டி திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் தலைமையில் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.