மக்காசோளத்துக்கு இழப்பீட்டு தொகை வழங்கக் கோரி 2 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்
எட்டயபுரம் அருகே படர்ந்தபுளி குறுவட்டத்துக்கு உள்பட்ட 16 கிராம விவசாயிகளுக்கு மக்காசோள பயிருக்கான காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் 2 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
படர்ந்தபுளி குறுவட்டத்துக்கு உள்பட்ட 16 கிராம விவசாயிகள் கடந்த 2016 - 17 ம் ஆண்டு மக்காசோளம் பயிரிட்டிருந்தனர். அதற்குரிய பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை வழங்கக் கோரி புதன்கிழமை று எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே விவசாயிகள் தமிழ் விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 8.30 மணிக்கு கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜே.விஜயா தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாததால், வியாழக்கிழமை 2 ஆவது நாளாக போராட்டம் தொடர்ந்தது.
இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் விஜயா தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், நவ. 23-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் படர்ந்தபுளி குறுவட்டத்துக்கு உள்பட்ட 16 கிராம விவசாயிகளுக்கு மக்காசோள பயிருக்கான இழப்பீட்டுத் தொகை வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும், இதில் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து காத்திருப்பு போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.