மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆவதை நினைவு கூரும் வகையிலும், அந்த நடவடிக்கையை கண்டித்தும் சிஐடியூ மற்றும் சிடியூசி ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. சிஐடியூ மாநிலச் செயலர் ஆர். ரசல் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான தொழிற்சங்கத்தினர் கலந்துகொண்டு கைகளை கோர்த்தபடி சாலையோரத்தில் வரிசையாக நின்றனர்.
மேலும், மத்திய அரசுக்கு எதிராக பண மதிப்பிழப்பு தொடர்பான பாதிப்புகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகையை அவர்கள் தங்கள் கழுத்தில் தொங்கவிட்டிருந்தனர்.