சாத்தான்குளம் அருகே திங்கள்கிழமை அறுந்து விழுந்த மின்கம்பியால் ரூ.10 லட்சம் மதிப்பிலான வாழைகள் எரிந்து சாம்பலானது.
சாத்தான்குளம் அருகே மேல நடுவக்குறிச்சியில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சொட்டுநீர் அமைத்து விவசாயத்தை கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில் வயல் காட்டு பகுதியில் தாழ்வாக சென்ற மின்வயர் திங்கள்கிழமை திடீரென அறுந்து விழுந்ததில் வாழைகள் தீப்பிடித்து எரிந்ததாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து விவசாயிகள் தீயை அணைக்க முயன்றனர்.
இதில், மேலநடுவக்குறிச்சியைச்சேர்ந்த ஈனமுத்து (64), பாலசுப்பிரமணியன் (65), பூச்சிக்காடு விலக்கு பெருமாள் (48), பிரகாசபுரம் ஜஸ்டின் ஜெயக்குமார் (48) ஆகியோரின் 2,600 வாழைகள் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு ரூ. 10 லட்சம் இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். எரிந்த வாழைகளை அதிகாரிகள் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.