உடன்குடி அருகே கொட்டங்காடு அருள்மிகு தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி காலை 6.30 மணிக்கு யானை மீது கொடிப்பட்ட ஊர்வலம் நடைபெற்றது. 9 மணிக்கு கொடியேற்றம் மற்றும் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, இரவு 7.30 மணிக்கு அம்பாள் உள்பிரகார சப்பர பவனி, ஊஞ்சல் சேவை, சமயச் சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றது.
விழா நாள்களில் தினமும் சிறப்பு பூஜை, சிறப்பு அலங்கார பூஜை, அன்னதானம், அம்மன் பச்சை,வெள்ளை, சிவப்பு சாத்தி சப்பர பவனி, அம்மன் ஊஞ்சல் சேவை, சமயச் சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
செப். 28ஆம் தேதி நள்ளிரவு அம்மன் மற்றும் பவளமுத்து விநாயகர் சுவாமிகள் பூஞ்சப்பரத்தில் பவனி நடைபெறும். பவனி முக்கிய வீதிகள் வழியே சென்று செப். 29ஆம் தேதி இரவு 10 மணிக்கு கோயிலை வந்தடைந்தவுடன் இரவு 11 மணிக்கு கொடியிறக்கப்படும். செப். 30ஆம் தேதி காலையில் உணவு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் சுந்தரஈசன் மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.