சாத்தான்குளம் அருகே இளைஞர் கொலை வழக்கில் தேடப்பட்ட அவரது தாய், சகோதரர் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள தச்சன்விளை பள்ளம்தட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் முத்துக்குமார் (34). கூலித் தொழிலாளியான இவர், கடந்த 9-ம் தேதி மது அருந்திவிட்டு வந்து குடும்பத்தினரை தாக்கி தகராறில் ஈடுபட்டார். அப்போது, அவரது தாய் கிருஷ்ணவேணி (58), சகோதரர் மு. சுயம்புலிங்கம், உறவினர் பெ. மாரியப்பன் ஆகியோர் தாக்கியதில் முத்துக்குமார் பலத்த காயமடைந்தார்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இறந்தார்.
இதுகுறித்து தட்டார்மடம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் வழக்குப் பதிந்து, முத்துக்குமாரின் தாய் கிருஷ்ணவேணி உள்ளிட்ட 3 பேரையும் தேடிவந்தார்.
இந்நிலையில், திசையன்விளை பேருந்து நிலையத்தில் பதுங்கி இருந்த கிருஷ்ணவேணி, சுயம்புலிங்கம், மாரியப்பன் ஆகிய 3 பேரையும் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அவர்களை சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சரவணன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். 3 பேரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, கிருஷ்ணவேணி பாளையங்கோட்டை கொக்கிரகுளம் மகளிர் சிறையிலும், சுயம்புலிங்கம், மாரியப்பன் ஆகியோர் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேரூரணியில் உள்ள சிறையிலும் அடைக்கப்பட்டனர்.